காமுகர்களிடம் இருந்து தப்ப வாகனத்தில் இருந்து குதித்த மாணவி!!
டெல்லியை ஒட்டியுள்ள தொழில் நகரமான நொய்டாவில் நேற்று முச்சக்கர வண்டியில் தனியாக சென்ற கல்லூரி மாணவிக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்தக் காமுகர்களிடம் இருந்து கற்பையும், உயிரையும் காப்பாற்றிக் கொள்ள ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து கீழே குதித்து தப்பித்த அவர் இச்சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.
நொய்டா நகரின் பாரி சவுக் பகுதியில் வசிக்கும் அந்த மாணவி, தன்கவுர் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.டெக். பயின்று வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை வீட்டை விட்டு புறப்பட்ட அவர், ஒரு முச்சக்கர வண்டியில் ஏறி கல்லூரிக்கு சென்றார்.
வழியில் அந்த முச்சக்கர வண்டியை சிலர் வழிமறித்தனர். அவர்களையும் அதில் ஏற்றிக் கொண்ட சாரதி, கல்லூரிக்கு செல்லும் வழியாக போகாமல், யமுனா விரைவுப்பாதை சாலை வழியாக செல்லத் தொடங்கினார்.
தனிமையான ஒரு தெருவின் வழியாக சென்றபோது, ஏதோ விபரீதம் நிகழப் போகின்றது என்பதை யூகித்துக் கொண்ட அந்த மாணவி, முச்சக்கர வண்டியை நிறுத்தும்படி சத்தம் போட்டார்.
இதை அந்த சாரதி காதில் வாங்கிக் கொள்ளாமல் முச்சக்கர வண்டியை மேலும் வேகமாக ஓட்டத் தொடங்கினார்.
ஆபத்து நெருங்கி விட்டது என்பதை உணர்ந்துக் கொண்ட அவர், முச்சக்கர வண்டியில் இருந்து கீழே குதிக்க முயன்றபோது, வழியில் ஏறிய ஆசாமிகள் அவரது கையைப் பிடித்து இழுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
முழு பலத்தையும் திரட்டி அவர்களை பிடித்து தள்ளிவிட்டு, கீழே குதித்த அந்த மாணவி காயத்துடன் சாலையோரம் கிடப்பதை கண்டு அவ்வழியே சென்ற சிலர், இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கல்லூரி நிர்வாகிகள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
பட்டப்பகலில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பொலிசில் அந்த மாணவி புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Average Rating