அரியமங்கலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு!!
திருச்சி அரியமங்லம் மலையப்பநகர் காந்தி நகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 45). இவர் நேற்று இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அங்குள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்ற போது பின்னால் வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.
அதில் 2 பேர் இருந்தனர். சரஸ்வதி மீது மோதுவது போல மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர்கள் வேகமாக வந்தனர். சரஸ்வதி அதிர்ச்சியில் விலக முயன்ற போது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்தான்.
சரஸ்வதி செயினை காப்பாற்ற போராடினார். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் சரஸ்வதியை தள்ளிவிட்டு செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அரியமங்கலம் போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். போலீசார் தப்பி ஓடிய செயின் பறிப்பு திருடர்களை தேடி வருகிறார்கள்.
திருச்சியில் கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு சம்பவம் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு உறையூர் மற்றும் புத்தூரில் 3 பெண்களிடம் 15 பவுன் நகையை வாலிபர்கள் பறித்து சென்றனர். இப்போது அரியமங்லத்தில் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
செயின் பறிப்பு திருடர்கள் மீண்டும் கைவரிசை காட்ட தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தீபாவளி நேரத்தில் உல்லாச வாழ்க்கைக்காக பணம் தேவைக்கு வாலிபர்கள் செயின் பறிப்பில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சிறையில் இருந்த ஜாமீனில் விடுதலையான பழைய வழக்குகளில் தொடர்புடைய செயின் பறிப்பு திருடர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. சரஸ்வதி கூறிய வாலிபர்களின் அங்க அடையாளங்கள், மோட்டார் சைக்களின் விவரம் ஆகியவை குறித்து விசாரித்து வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Average Rating