பால் வாங்க பணம் இல்லாததால் குழந்தையை கொலை செய்தேன்: தாய் வாக்குமூலம்!!
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நொஞ்சிபேட்டை கோவில்கரடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 28) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி(25). இந்த தம்பதியருக்கு ஸ்ரீதேவி(4), திவ்ய தர்ஷினி(1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
சத்தியராஜ் குடிபழக்கத்துக்கு ஆளானதாக தெரிகிறது. இதனால் குடும்பம் நடத்த முடியாமல் ஜோதிமணி மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். 2 குழந்தைகளையும் வைத்து கொண்டு அவரால் சமாளிக்க முடியவில்லை.
சில தினங்களாக சத்தியராஜ் ஈரோட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று வீட்டுக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் வரவில்லை. பணம் இல்லாததால் குழந்தைகளுக்கு பால் வாங்க முடியவில்லை.
இது ஜோதிமணிக்கு ஆவேசத்தை ஏற்படுத்தியது. ஒரு குழந்தையை கொன்றுவிட தீர்மானித்தார். இதையடுத்து பால் கேட்டு அழுத இளைய மகள் திவ்யதர்சினியின் நெற்றியில் அரிவாளால் தாக்கினார். இதில் வலி தாங்க முடியாமல் குழந்தை வீறிட்டு அழுதது.
பின்னர் ஒரு துணியால் குழந்தையின் உடலை சுற்றி கட்டினார். சமையல் அறைக்கு தூக்கி சென்று குழந்தையின் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக தெரிகிறது. இதில் சிறிது நேரத்தில் திவ்யதர்ஷனி உடல் கருகி பரிதாபமாக இறந்தாள்.
பின்னர் குழந்தையை கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி ஜோதிமணிக்கு ஏற்பட்டது. வீட்டின் வெளியே உட்கார்ந்து அழுதார். அக்கம் பக்கத்தினர் விசாரித்தபோது குழந்தையை கொன்று விட்டதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஜோதிமணியை கைது செய்தனர்.
அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
எனது கணவர் சத்தியராஜூக்கு குடிப்பழக்கம் உள்ளது. குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவர் குடும்பம் நடத்த பணமும் தருவதில்லை. வீட்டை விட்டு வெளியே சென்றால் 2, 3 தினங்கள் கழித்துதான் வீடு திரும்புவார். இதற்கிடையே சில நேரங்களில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றுவார். அப்போது வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து விற்று குடிப்பார். கடந்த 2 தினத்துக்கு முன்பு கியாஸ் சிலிண்டரை எடுத்து சென்று விற்று குடித்தார்.
சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் கட்டிட வேலைக்கு சென்ற அவர் நேற்று வீடு திரும்புவதாக கூறியிருந்தார். ஆனால் நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் திவ்யதர்ஷினி பால் கேட்டு அழுதாள். ஆனால் பால் வாங்க என்னிடம் பணம் இல்லை. 2 குழந்தைகளையும் வைத்து கொண்டு சிரமப்படுவதை விட ஒருவரை கொன்று விடலாம் என தீர்மானித்தேன். இதனால் எனது மனதை கல்லாக்கி கொண்டு பெற்ற மகள் என்றும் பாராமல் திவ்யதர்ஷினியின் நெற்றியில் அரிவாளால் தாக்கி விட்டு பின்னர் தீ வைத்து கொன்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Average Rating