காதலியை கொன்ற ஆஸ்கார் பிஸ்டோரியசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
செயற்கை கால்களுடன் ஓடி பல்வேறு சாதனைகளை படைத்த தென் ஆப்பிரிக்காவின் பிரபல ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரான ஆஸ்கார் பிஸ்டோரியஸ் (வயது 26) தனது காதலியை கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ந்தேதி அதிகாலை பிரிட்டோரியாவில் உள்ள தனது சொகுசு பங்களாவில் காதலி ரீவா ஸ்டீன்காம்பை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் பிஸ்டோரியஸ்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், திருடன் என்று நினைத்து தவறுதலாக தனது காதலியை சுட்டு விட்டதாக கூறினார். ஆனால் பிஸ்டோரியஸ் திட்டமிட்டு ரீவாவை சுட்டுக்கொன்றதாக அரசு தரப்பு குற்றஞ்சாட்டியது.
ஏறத்தாழ ஏழு மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்கு பின் பிஸ்டோரியசுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பை வழங்கிய நீதிபதி கூறுகையில், தண்டனை வழங்காமல் விடுவிப்பது சமூகத்தில் தவறான செய்தியை தருவதாக அமைந்துவிடும் என்றார்.
இந்த தீர்ப்பு குறித்து ரீவாவின் தாயார் கூறுகையில், தண்டனை தருவதால் மட்டும் தனது மகள் திரும்ப வரப்போவதில்லை என்றார். இத்தீர்ப்பை கேட்ட பிஸ்டோரியஸ் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.
ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், பத்து மாதங்கள் சிறையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், மீதமுள்ள தண்டனைக் காலத்தை வீட்டுக்காவலாக மாற்றிக்கொள்ளலாம் என்று சட்ட பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating