நன்கொடை பணத்தில் மேக்கப்பா..? பெண் அமைச்சர் பணிநீக்கம்.!!
கட்சிக்காக வாங்கிய நன்கொடைகளை, தனது சொந்த தேவைக்காக பயன்படுத்திய ஜப்பானிய பெண் அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ஜப்பானில் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் சுதந்திர ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் 40 வயதான யூகோ ஒபுச்சி தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
யூகோ ஒபுச்சியின் திறமையான நிர்வாக நடவடிக்கையினால், ஜப்பானில் தொழில், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் யூகோ ஒபுச்சிக்கு கேபினட் அந்தஸ்தை பிரதமர் ஷின்சோ அபே அளித்தார். இதற்கிடையே, கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது அபேவின் கட்சிக்கு ஏராளமான நன்கொடைகள் குவிந்தன.
யூகோவின் மத்திய ஜப்பான் தொகுதியில் 58 லட்சம் ரூபா நன்கொடை அளிக்கப்பட்டு இருந்தது. அந்த நிதியை தனது மேக்கப் மற்றும் ஏராளமான அழகு பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் டோக்கியோவில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் யூகோ ஒபுச்சி தன்மீதான குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் அபே ஏற்றுக்கொண்டதாக ஜப்பானில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.
Average Rating