தக்கலை அரசியல் பிரமுகரின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய தொழிலாளி மீது தாக்குதல்!!
தக்கலையை அடுத்த கொற்றியோடு, மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 42).வெல்டிங் தொழிலாளி.
இவர் நேற்று மாலை படுகாயங்களுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். தலை மற்றும் கைகளில் ரத்தம் வடிந்த நிலையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். காயத்துக்கான காரணம் பற்றி கேட்ட போது தன்னை 7 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டதாக கூறினார்.
இது பற்றி அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் போலீசில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து மனோஜ்குமார் கொற்றியோடு போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மணலிக்கரை பகுதியில் நான் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். எனது எதிர்வீட்டில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு அடிக்கடி ஒரு அரசியல் பிரமுகர் வந்து செல்வார். இரவு நேரங்களில் அவர் அந்த பெண் வீட்டுக்கு செல்வதை நான் பார்த்துள்ளேன்.
ஒரு நாள் நான் பார்ப்பதை அந்த அரசியல் பிரமுகர் பார்த்து விட்டார். அதற்கு சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுடன் அந்த அரசியல் பிரமுகருக்கு ரகசிய தொடர்பு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் பேச தொடங்கினர்.
அவர்களுக்கு விஷயம் தெரிய நான் தான் காரணம் என அந்த அரசியல் பிரமுகர் நினைத்து விட்டார். எனவே அவர் என்னை விரோதியாக பார்த்தார்.
நேற்று மாலை நான் வீட்டில் இருந்த போது ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த அரசியல் பிரமுகர் என் வீட்டுக்கு வந்தார். அவருடன் மேலும் 6 பேர் இருந்தனர். அவர்கள் என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர்.
இதை தட்டிகேட்ட என்னையும் தாக்கினர். இதில் எனக்கு முகம், கை, கால் மற்றும் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வடிந்தது. நான் மயங்கி விழுந்தேன். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை கண்டுபிடித்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் அந்த அரசியல் பிரமுகர் மற்றும் அவரது கூட்டாளிகள் என 7 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating