காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 5 பேர் கைது!!
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் போலீஸ் சரகம் தெற்கு நாணலூர் அருகே படுகையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் மாதவன் (வயது20). இவர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையிலுள்ள ஸ்டிக்கர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 28–ந் தேதி மாலை அதே பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதி மாடியிலிருந்து மாதவன் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் மாதவன் இறந்தார். இது குறித்து மாதவனின் தந்தை சிவசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் திடீர் திருப்பமாக மாதவன் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததுள்ளது. மாதவன் படுகையூர் அருகே பெருவிடைமருதூர் கிராமத்திலுள்ள பிளஸ்–2 படிக்கும் மாணவியை காதலித்து வந்தார். இவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர். இதையறிந்த அந்த மாணவியின் உறவினர்களான பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த கார்த்தி (32),
கோட்டைக்குளம் கீழமேடு கே.கலைச்செல்வன் (34), மற்றும் இவர்களின் நண்பர்களான கொண்டிக்குளத்தை சேர்ந்த எம்.முத்துக்குமார் (36), பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் (35), அல்லா கோவில் தெருவை சேர்ந்த பிரபு (30) ஆகியோர் சம்பவத்தன்று மாதவனை அவர் வேலை பார்க்கும் கடையிலிருந்து அறந்தாங்கி சாலையிலுள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் காதலிக்கும் பெண்ணை மறந்து விடும்படி கூறி மிரட்டினர். இதற்கு மாதவன் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் மாதவனை அடித்து உதைத்து விடுதி மாடியிலிருந்து அவரை கீழே தள்ளி விட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து சாதாரண மரணம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த கார்த்தி உள்பட 5 பேரையும் பட்டுக்கோட்டை நகர போலீசார் கைது செய்தனர்.
Average Rating