செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.-ஐ காண்பிக்காததால் மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளிய கணவன்!!
இந்தூரில் தனது மனைவியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ஐ காண்பிக்காததால், இரண்டாவது மாடியின் மேற்பரப்பில் இருந்து அவரை கணவரே கீழே தள்ளிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தூரில் உள்ள லசுடியா பகுதியில் வசித்து வரும் ஆனந்த் சர்மா என்பவர் தனது மனைவி தீப்மாலா சர்மாவின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ஐ காண்பிக்குமாறு நீண்ட காலமாக அவரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தீப்மாலா தனக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ஐ காண்பிக்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிரன்று காலையில் தனது மனைவியை இரண்டாவது மாடியின் மேல் தளத்துக்கு தேநீர் அருந்த வருமாறு அழைத்து சென்ற ஆனந்த், அவரது செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ஐ காண்பிக்குமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் தீப்மாலா அதற்கு மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் நீடித்துள்ளது. ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த ஆனந்த் அங்கிருந்து மனைவியை கீழே தள்ளியுள்ளார். இதில் தரையில் வந்து விழுந்த தீப்மாலா படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து கீழே விழுந்த மனைவியை ஆனந்தே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
அங்கு தனது மனைவி மாடியிலிருந்து தவறி விழுந்து விட்டதாக ஆனந்த் பொய் சொல்லியுள்ளார். ஆனால் நேற்றிரவு மருத்துவமனையில் கண்விழித்த தீப்மாலா, நடந்த உண்மைகளை கூறிய போது தான் ஆனந்தே அவரை கீழே தள்ளியுள்ளது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தை கைது செய்தனர்.
Average Rating