முல்லை பெரியாற்றில் கரைப்பகுதியில் அடுத்தடுத்து பிணங்கள் மீட்பு: பொதுமக்கள் அதிர்ச்சி!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ஞானம்மாள்கோவில் முல்லைபெரியாற்று கரைப்பகுதியில் உறைகிணறுகள் உள்ளது. இந்த கிணறு அருகே நேற்று முன்தினம் தலையில்லா ஆண் உடல் கிடந்தது. அவரது உடலில் காயங்களும் இருந்தது. அவரை யாரோ கடத்தி கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கிறார்கள்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி சோதனை நடத்தியபோது அவரது கையில் சித்ரா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. ஆனால் முகம் இல்லாததால் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அதே பகுதியை சேர்ந்த காணாமல் போன நபர்கள் குறித்து கேட்டறிந்தனர். எனினும் அவர் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே இன்று காலை அவரது உடல் கிடந்த அதே இடத்தில் மேலும் பிணம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முல்லைபெரியாற்று பகுதியில் உள்ள தடுப்பணை அருகே சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
அவர் ஜாக்கெட் மட்டும் அணிந்திருந்தார். ஆனால் நீரில் ஊறிய நிலையில் இருந்ததால் முகம் சரியாக அடையாளம் காணப்படவில்லை. இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்தும் தெரியவில்லை. அந்த இடத்தில் மேலும் பிணங்கள் உள்ளனவா என்று தீயணைப்புத்துறையினர் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
முல்லைபெரியாற்றில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து உடல்கள் பிணமாக மீட்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating