மனைவிகளை அடித்து உதைக்கும் ஆண்களை சும்மா விடமாட்டேன்: நிர்மலா சீதாராமன் பேச்சு!!
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமன் ஆந்திராவில் 2 கிராமங்களை தத்து எடுத்து உள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் மண்டலத்தில் உள்ள துர்ப்பிதாலு, வெதாம்யினா வானிகலங்கா கிராமத்தை தத்து எடுத்துள்ள நிர்மலா சீதாராமன் நேற்று அந்த கிராமத்துக்கு சென்றார்.
தனது கணவரும் ஆந்திர அரசு ஆலோசகருமான பரகால பிரபாகருடன் கிராமத்தை தூய்மை செய்தார். பின்னர் கிராம மக்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:–
இங்கு மது குடித்துவிட்டு வரும் ஆண்கள் அவர்களது மனைவியை அடித்து உதைக்கும் சம்பவம் இன்றும் நடக்கிறது. இதனை நானே பார்த்து உள்ளேன்.
இனி அப்படி செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். அவர்களுக்கு எதிராக நானே போராட்டம் நடத்துவேன்.
இந்த கிராமத்தில் ஒரு சமுதாய கூடம் அமைக்கப்பட உள்ளது. பெண்கள் அவ்வப் போது கூடி தங்களது கஷ்ட– நஷ்டங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள கணவர் உங்களை அடித்தால் நீங்கள் இந்த சமுதாய கூடத்திலேயே தங்கி விட வேண்டும். உங்கள் கணவர் வருத்தம் தெரிவிக்கும் வரை வீட்டுக்கு செல்லக்கூடாது.
இந்த சமுதாய கூடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
உங்கள் வீட்டு குப்பைகளை ரோட்டில் கொட்டாமல் அதனை சேகரித்து ஒரே இடத்தில் கொட்ட வேண்டும். கிராமத்தை பெண்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Average Rating