ஆரல்வாய்மொழி ஆசிரமத்தில் இருந்து மாயமான 8–ம் வகுப்பு மாணவி எங்கே?: போலீஸ் விசாரணையில் தகவல்!!
அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் துரை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மகள் சுபா (வயது 14) ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி இருந்து பெருமாள்புரத்தில் உள்ள பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று காலை சுபா ஆசிரம வளாகத்தில் உள்ள தொட்டியில் குளிக்கச் சென்றார். அதன்பிறகு அவர் ஆசிரமத்திற்கு வரவில்லை. பள்ளிக்கும் செல்லவில்லை. இதுகுறித்து ஆசிரம பொறுப்பாளர்கள் சுபாவின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாணவியின் தாயார் சாந்தி மற்றும் உறவினர்கள் ஆசிரமத்திற்கு விரைந்து வந்தனர். சுபா வீட்டுக்கும் செல்லாததால் அவர் எங்கு சென்றார்? என தெரியாமல் தாயார் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சாந்தி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் நீதி ராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சுபா ஏற்கனவே கன்னியாகுமரி பகுதியில் ஒரு ஆசிரமத்தில் தங்கி படித்ததும், அங்கு அவரது நடவடிக்கைகள் சரி இல்லாததால் பெற்றோர் அவரை இந்த ஆசிரமத்திற்கு மாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது. சுபாவின் புத்தகங்களை போலீசார் பார்த்த போது அதில் ஒரு வாலிபரின் பெயர் இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating