பீகார் மருத்துவமனையில் எம்.எல்.ஏ.வின் பேரன் கடத்தல்: பிறந்த சில மணி நேரத்தில் தூக்கிச் சென்ற பெண்களுக்கு வலை!!
பீகார் மாநிலம் முசாபர்பூரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வீணா தேவியின் பேரனை இரண்டு பெண்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.
பீகார் மேல்சபை உறுப்பினர் தினேஷ் பிரசாத் சிங்(ஐக்கிய ஜனதா தளம்), பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வீணா தேவி ஆகியோரின் மகன் அபிஷேக் என்ற ராஜா பாபு. இவரது மனைவி குஷிக்கு நேற்று முசாபர் நகர் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை திடீரென காணாமல் போனது.
மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது, இரண்டு பெண்கள் குழந்தையுடன் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்ற பெண்களை தேடி வருகின்றனர். மேலும், மருத்துவமனையின் இரண்டு பாதுகாவலர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “தாய் குஷி நேற்று பிற்பகல் குழந்தையுடன் தனது அறையில் தனியாக இருந்தார். அப்போது டிப் டாப்பாக உடையணிந்த இரண்டு பெண்கள் அங்கு வந்து குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் தாய் கண் அயர்ந்தபோது, இருவரும் குழந்தையுடன் தப்பிச்சென்றுவிட்டனர்” என்றனர்.
குழந்தையை கடத்திச் சென்ற பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அதன்மூலம் பொதுமக்கள் உதவியுடன் பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating