இத்தாலி வைத்தியருக்கு எபொலா : ஐரோப்பிய நாடுகளையும் தாக்கும் அபாயம் !!
இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் எபொலா தொற்று நோய்க்கு உள்ளாகி தற்போது நாடு திரும்பியுள்ளார். மேற்கு ஆபிரிக்க நாடான சியாராலியோனில் எபொலா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்து வந்த வைத்தியர் ஒருவரும் எபொலா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர், மிகுந்த பாதுகாப்பின் மத்தியில் சியாராலியோனிலிருந்து இத்தாலிக்கு இராணுவ விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது குறித்த வைத்தியருக்கு இத்தாலியில் எபொலா தொற்றுக்குள்ளானவர்களை பராமரிக்கும் சிறப்பு மையத்தில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 50 வயது மதிக்கத்தக்க இந்த வைத்தியர் இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள சிசிலியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியில் எபொலா உயிர்கொல்லி நோய்த் தொற்றுக்கு உள்ளானதாக கருதப்படும் முதல் நபர் அவரென்பதால் அங்கு தற்போது எபொலா பயம் தொற்றியுள்ளது.
இந்நிலையில் இத்தாலியின் சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், எபொலா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு சிகிச்சையளிப்பவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் மக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்திருக்க மாட்டார்கள் என்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எபொலா நோயாளிகளுடன் தொடர்புடைய அனைவரிற்கும் சிறப்பு மையம் மூலம் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating