ராஜீவ் கொலை வழக்கு தொடர்பில் கேபி.யிடம் தகவல் பெற்றுத் தருமாறு CBI கோரிக்கை!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகத்தர் குமரன் பத்மநாதனிடம் இருந்து உரிய விசாரணை தகவல்களை விரைவாக பெற்றுத்தருமாறு சிபிஐ, இன்டர்போல் சர்வதேச பொலிஸிடம் கோரியுள்ளது.
இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பில் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்டர்போல் இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் சிபிஐ (மத்திய புலனாய்வு பிரிவு) கோரியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில் இலங்கையிடம் இருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுவிட்டால் அந்த வழக்கை முடிவுறுத்த முடியும் என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது.
2009ஆம் ஆண்டு கே.பி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். இதன்பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் 2012ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு கிளிநொச்சியில் அரசாங்கத்தின் பாதுகாப்புடன் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் குமரன் பத்தநாதனின் தொடர்பு குறித்து தகவல்களை பெற்றுத்தருமாறு இலங்கையிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும் அது இடம்பெறவில்லை. இதனையடுத்தே தற்போது இன்டர்போலிடம் தமது கோரிக்கையை விடுத்துள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே பல்ஒழுக்க கண்காணிப்பு நிறுவனம் இலங்கைக்கு சென்று உத்தியோகபூர்வமற்ற வகையில் குமரன் பத்மநாதனை விசாரணை செய்தது.
இதன்போது 1991 மே 21இல் இடம்பெற்ற ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் தமக்கு எவ்வித தகவல்களும் தெரியாது என்று கே.பி மறுத்திருந்தார்.
இந்தநிலையில் இந்தியாவின் புலனாய்வு பிரிவான ரோ மற்றும் ஐபி என்பன ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகளை முடிக்க இன்னும் ஒருவருட கால அவகாசத்தை பெற்றுள்ளன.
பல்ஒழுக்க கண்காணிப்பு நிறுவனம், தமது விசாரணையை சுமார் 40 அதிகாரிகள் சகிதம் கடந்த 16 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating