இறந்து போன தோழி கனவில் வந்து அழைப்பதாக கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை!!
சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள ராமசமுத்திரம் செல்லும் சாலை ஓரம் ஒரு கிணற்றில் பெண் பிணம் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புங்கனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் அஞ்சனப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புங்கனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் புங்கனூர் பிரகாசம் காலனியை சேர்ந்த தம்பதி சத்தியநாராயணா–நாராயணம்மாள் ஆகியோரின் மகள் கல்பனா (வயது 15) என்று தெரிய வந்தது. அவர், அங்குள்ள ஒரு அரசு உயர் நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் காணவில்லை என தெரிய வந்தது.
இதையடுத்து பெற்றோரை வரவழைத்து மாயமான தனது மகள் கல்பனாவின் உடல் தானா? என்பதை உறுதிப்படுத்தப்பட்டது.
கிணறுக்கு அருகில் கல்பனாவின் பள்ளிக்கூட புத்தகப்பை கிடந்தது. அதில் தன்னுடைய தாயார் நாராயணம்மாளுக்கு, கல்பனா தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
அம்மா… என்னுடைய தோழி மமதா என்பவள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாள். அதில் இருந்து அவள் ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரவில் எனது கனவில் தோன்றி, நான் தனியாக இருக்கிறேன், நீ என்னுடன் வா என கூறுகிறாள்.
அப்போது அவள் என்னை கிராமத்துக்கு அருகே உள்ள ஒரு ஏரிக்கு அழைத்து செல்வதுபோல் இருக்கிறது. நீ வரவில்லை என்றால் உன் குடும்பத்தாரை கொலை செய்து விடுவதாக பயமுறுத்துகிறாள். அம்மா.. அப்பாவும், அண்ணனும் கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறுமா.
மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.
கல்பனா இறந்துபோன தகவலை கேள்விப்பட்ட அவரின் பெற்றோரும், உறவினர்களும் புங்கனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதனர்.
தற்கொலை செய்து கொண்ட கல்பனா தன் கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த விவரங்கள் தொடர்பாக புங்கனூரை சேர்ந்த மனநல நிபுணர் சுதாகர்ரெட்டி கூறுகையில் இறந்துபோன தன்னுடைய தோழி அமாவாசை அன்று கனவில் தோன்றி தன்னை அழைப்பாக கூறுவது எல்லாமே பிரமை. மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டதாலேயே கல்பனா தற்கொலை செய்து கொண்டார். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு மந்திரம், தந்திரம் ஓதுவது தாயத்து, முடிகயிறு கட்டுவது ஆகியவற்றை பெற்றோர்கள் செய்யக்கூடாது. அவர்களை மனநல மருத்துவர்களிடம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
Average Rating