திருமணம் செய்ய இருந்த கொள்ளையன் கைது: விஜயகாந்த் படத்தில் வில்லனாக நடித்தவர்!!
திருப்பூர் எம்.ஜி.நகரை சேர்ந்த பூபதி என்பவர் மகன் வெங்கடேசன் (வயது 42). இவர் கடந்த 2 மாதத்தில் கோவையில் 10 இடங்களில் திருடியுள்ளார். இவர் மீது சென்னை, வேலூர், ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 50–க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் இவர் குண்டர் சட்டத்தில் 8 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் வணிக கடையில் திருடிய போது வெங்கடேசன் முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சி பதிவை வைத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்தன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
அவினாசி ரோட்டில் கடை ஒன்றில் திருடுவதற்காக நோட்டம் விட்ட வெங்கடேசனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 2.87 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் வெங்கடேசன் திருப்பூர் தென்னம்பாளையம் ரோட்டை சேர்ந்த கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்ய இருந்ததும் அதற்குள் போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.
வெங்கடேசன் நடிகர் விஜயகாந்த்துடன் சின்னகவுண்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜெய்ஹிந்த் படத்திலும் இவர் துணை வில்லனாக நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு சரியாக கிடைக்காத நிலையில் இவர் முழு நேர கொள்ளையனாக மாறிவிட்டார்.
கைதான வெங்கடேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:–
எனக்கு பாம்புக்கறி மிகவும் பிடித்தமானது. நான் சிறுவனாக இருந்த போது பாம்புக்கறி சாப்பிட்டால் நோய்கள் எதுவும் வராது என்று பெரியவர்கள் கூறியதால் பாம்புக்கறி சாப்பிடும் பழக்கத்தை அப்போது இருந்தே தொடர்ந்து வருகிறேன். வாரத்துக்கு ஒரு பாம்பையாவது பிடித்து அதன் தலையை மட்டும் நறுக்கி போட்டு விட்டு அதனை சுட்டோ அல்லது பொறித்தோ சாப்பிடுவேன். பாம்புக்கறி சாப்பிடும் போது குறைந்தது 3 பாட்டில் பீர் ஒரே நேரத்தில் குடித்து விடுவேன். கையில் கிடைக்கும் பணத்தை மனம்போல் செலவழிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating