சூதாட்டத்தால் விபரீதம்: 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்!!
திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் வெனிஷ். அவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 36). இவர்களுக்கு நிகிதா (14), பவித்ரா (9) ஆகிய மகள்கள் உள்ளனர். கடந்த சிலநாட்களாக வெனிஷ் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வந்தார். இதனை அறிந்த ஆரோக்கியமேரி தனது கணவரை கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து வெனிஷ் சூதாடினார்.
நேற்று இது தொடர்பாக வீட்டில் பிரச்சினை வெடித்தது. இதனால் கணவன்– மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து சமரசம் செய்தனர். ஆனாலும் ஆரோக்கிமேரி சமரசம் அடையவில்லை.
கணவரின் செயலை பார்த்து விரக்தி அடைந்து காணப்பட்டார். எனவே அவர் தற்கொலை செய்வதென தீர்மானித்தார். தான் மட்டும் இறந்தால் 2 மகள்களும் அனாதை ஆகிவிடுவார்கள் என கருதினார்.
எனவே அவர்களுக்கு விஷம்கொடுத்து கொல்ல முடிவு செய்தார். அதன்படி மனதை கல்லாக்கி கொண்ட ஆரோக்கியமேரி 2 மகள்களுக்கும் சாணிப்பவுடரை கொடுத்தார். பின்னர் தானும் உட்கொண்டார். சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கினர். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் 3 பேரையும் தூக்கி கொண்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating