தேவயானி கோப்ரகடே மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார்!!
அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதனைக் கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து, இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கூறியது.
இந்நிலையில், அவரை நியூயார்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர பணிக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்தியாவுக்கு திரும்பிய தேவயானி மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்தார்.
அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியபோது, இந்திய அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் தனது இரு குழந்தைகளுக்கும் அமெரிக்க பாஸ்போர்ட்களை பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது, பணி நடத்தை விதிமுறைகளையும், ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டையும் மீறிய செயல் என்பதால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவர் மீது நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த தேவயானி கோப்ரகடே, இந்திய அரசின் அனுமதியின்றி தனது குழந்தைகளுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் வாங்கியது தொடர்பாக சில கருத்துகளை தனிப்பட்ட முறையில் பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.
இதனையொட்டி, தேவயானி கோப்ரகடே மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவரை கட்டாய காத்திருப்போர் பட்டியலில் அவர் வைக்கப்படுவார் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
Average Rating