கேரளாவில் 8 குடும்பங்களை சேர்ந்த 30 கிறிஸ்தவர்கள் இந்து மதத்துக்கு மாற்றம்!!
நாட்டில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் அதனை நிறைவேற்ற அரசு தயாராக இருப்பதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு தெரிவித்தார்.
இதற்கிடையே விசுவ இந்து பரிஷத் அமைப்பு ‘கர் வாபசி’ (வீடு திரும்புதல்) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பிற மதத்தினர் இந்து மதத்துக்கு திரும்ப விரும்பினால் அவர்களை இந்துவாக மதம் மாற்றும் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்தது.
அதன்படி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் 225 கிறிஸ்தவ பழங்குடியின மக்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்தது.
இதுபோல கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செப்பாடு அருகே உள்ள கனிச்சநல்லூர் கிராமத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 கிறிஸ்தவர்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விசுவ இந்து பரிஷத் செய்தது. அங்குள்ள கோவிலில் இதற்காக யாகம் வளர்த்து 30 பேரும் இந்து மதத்தை தழுவினர். அவர்களுக்கு வேத புத்தகங்கள் மற்றும் கடவுள்களின் படங்கள் வழங்கப்பட்டன.
இதுபற்றி ஆலப்புழா மாவட்ட விசுவ இந்து பரிஷத் தலைவர் வக்கீல் பிரதாப் ஜீ படிக்கல் நிருபர்களிடம் கூறியதாவது:–
கனிச்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 30 பேரை இந்துக்களாக மதம் மாற்றி உள்ளோம். இதற்காக அவர்கள் யாரும் கட்டாயப்படுத்த படவில்லை. அவர்களாக விரும்பியே மீண்டும் இந்து மதத்துக்கு மாறி உள்ளனர். இவ்வாறு மாறுவதற்கு பணமோ, பொருளோ கொடுக்கப்படவில்லை. இந்த 30 பேரின் முன்னோர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி உள்ளனர். அவர்களின் வாரிசுகள் தான் இப்போது மீண்டும் இந்துக்களாக மாறி இருக்கிறார்கள்.
எங்களின் இந்த பணி தொடர்ந்து நடைபெறும். இன்னும் சில நாட்களில் 150–க்கும் மேற்பட்டோர் இந்து மதத்தை தழுவ இருக்கிறார்கள். இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். இம்மாவட்டத்தில் ‘கர் வாபசி’ திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Average Rating