வேப்பங்குப்பம் அருகே பள்ளி மாணவன் கடத்தல்: 3 பேர் கைது!!
பள்ளிகொண்டான் அடுத்த தட்டான் குட்டை கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (25). அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (25). இருவரும் நண்பர்கள். பிரபு ஒரு ஆண்டுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள ஒரு கம்பெனியில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை தவணை முறை கடனில் வாங்கினார். இதற்கு பிரபுவின் நண்பர் வினோத்குமார் ஜாமீன் கொடுத்தார்.
மோட்டார் சைக்கிள் கடன் வாங்கிய பிரபு சரியாக பணம் செலுத்ததாமல் பெங்களுருக்கு சென்று விட்டார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய வினோத்குமாரிடம் கடனை கொடுக்கும்படி மோட்டார் சைக்கிள் கம்பெனியினர் கேட்டு வந்தனர்.
நண்பன் என்கிற முறையில் ஜாமீன் வழங்கியதால் தானே இந்த பிரச்சினை என்று வினோத்குமார் ஆத்திரமடைந்தார். பிரபுவின் தம்பி திலீப்குமார் (15) ஒடுகத்தூர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். இவர் வணண்ணாந்தாங்கல் கிராமத்தில் உள்ள சித்தப்பா குமரேசன் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில் வினோத்குமார் அவரது தம்பி விஜயகுமார் (23). அவரது நண்பர் ஜெகமோகன் (23) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் டூவீலர்களில் ஒடுகத்தூருக்கு வந்து பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவன் திலீப்குமாரை கடத்தி சென்று தட்டான் கொட்டாயில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.
பின்னர் பெங்களூரில் உள்ள பிரபுவுக்கு போன் செய்து பணம் எடுத்து வந்து கொடுத்து விட்டு உனது தம்பி திலீப்குமாரை அழைத்து செல் என்றனர்.
இதுகுறித்து திலீப்குமார் சித்தப்பா குமரேசனுக்கு தெரிவித்தார். அவர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் பெங்களூரில் உள்ள பிரபுவை வரவழைத்தனர்.
இதையடுத்து பிரபு, வினோத்குமாருக்கு போன் செய்து பணத்துடன் மகமதுபுரம் கூட் ரோட்டில் நிற்பதாக தகவல் அளித்தார்.
அதன்படி வினோத்குமார், விஜயகுமார், ஜெகநாதன் ஆகியோர் மாணவன் திலீப்குமாரை பைக்கில் மகமதுபுரம் கூட்ரோட்டிற்கு அழைத்து வந்தனர்.
அங்கிருந்த போலீசார் வினோத்குமார், விஜயகுமார், ஜெகநாதன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் திலீப்குமாரை அவரது சித்தப்பா குமரேசனிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating