ரெயில் தண்டவாளத்தில் 1½ வயது குழந்தையை வைத்த தம்பதி: போலீசார் விசாரணை!!
தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் சுற்றிதிரிந்த வயதான தம்பதியினர் நேற்று திடீரென தங்கள் கையில் வைத்திருந்த சுமார் 1½ வயது ஆண் குழந்தையை ரெயில் தண்டவாளத்தில் வைத்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஓடிச்சென்று அந்த குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை தண்டவாளத்தில் வைத்த தம்பதியினரையும் சுற்றி வளைத்தனர்.
இது குறித்து பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் நடந்த விபரங்களை போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குழந்தையை பெற்று கொண்ட அந்த தம்பதியினரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த பரமசிவம்–சிவகாமி என்பதும் இவர்கள் கணவன்–மனைவி என்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த 3 மாதமாகவே இவர்கள் தர்மபுரி ரெயில் நிலையம் பகுதிகளில் சுற்றி திரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது குழந்தை தங்களதுதான் என்று கூறினர். ஆனால் போலீசார் ரெயில் நிலையப் பகுதியில் விசாரணை நடத்திய போது அந்த தம்பதியினர் கடந்த 3 நாட்களாகத்தான் இந்த குழந்தையை கையில் வைத்து கொண்டு சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
மேலும் பரமசிவத்துக்கு 60 வயது இருக்கும், சிவகாமிக்கு 55 வயது இருக்கும். அப்படி இருக்கையில் அவர்கள் 1½ வயது ஆண் குழந்தையை தங்கள் குழந்தைகள் என்று கூறுவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை அவர்கள் கடத்தி வந்தார்களா? அல்லது தவறி விட்டு சென்ற குழந்தையை எடுத்து கொண்டு சுற்றினார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் எங்காவது குழந்தைகள் மாயமாகி இருப்பதாக புகார்கள் வந்து இருக்கிறதா? என்பது குறித்தும் தர்மபுரி போலீசார் ஆன்லைன் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.
Average Rating