கள்ளக்குறிச்சி: தலையில் கல்லை போட்டு தாயை கொன்ற மனநலம் பாதித்த மகன் கைது!!
கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சின்னம்மாள் (70). இவர்களுக்கு ராமச்சந்திரன் (40), பெரியசாமி (34) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரனுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சங்கராபுரம் அருகே வாடாபுரத்தை சேர்ந்த செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
ராமச்சந்திரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் செல்வி திருமணமான 2 வருடத்திலேயே கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் செல்வி வேறொரு வாலிபரை 2–வது திருமணம் செய்து கொண்டார்.
இதனை அறிந்தது முதல் ராமச்சந்திரனுக்கு மேலும் மனநோய் பாதித்தது. இதையடுத்து அவரை சென்னை கீழ்ப்பாக்கம் மனநோய் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரனுக்கு சற்று குணமானதால் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த ராமச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மாலை ராமச்சந்திரன் வீட்டில் இருந்த ஊதுகுழலை எடுத்துக்கொண்டு வீட்டை சுற்றி சுற்றி வந்தார். இதனை அவரது தாய் சின்னம்மாள் கண்டித்து ஊதுகுழலை வீசிவிடும்படி கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து வந்து சின்னம்மாள் தலையில் ஓங்கி போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சின்னம்மாள் இறந்து போனார். இதனை அறிந்த ராமச்சந்திரனின் தம்பி பெரியசாமி, இவரது மனைவி சுந்தரி மற்றும் உறவினரான மற்றொரு பெரியசாமி ஆகியோர் இது குறித்து ராமச்சந்திரனிடம் தட்டிக்கேட்டனர். அப்போது ராமச்சந்திரன் ஊதுகுழலால் அவர்களையும் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating