கணவருடன் தகராறு: 4 குழந்தைகளுடன் தீக்குளித்த பெண்!!
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 4 குழந்தைகளுடன் 35 வயது பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலந்த்ஷர் மாவட்டம் அர்னியா பகுதியில் உள்ள குர்யாவாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்கிஷோர் (வயது 40). இவர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று மனைவிக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை கண்டித்து விட்டு வெளியே சென்றுவிட்டார்.
இதனால், மனவேதனை அடைந்த அவரது மனைவி வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றினார். அத்துடன் தனது மூன்று வயது முதல் 12 வயதுடைய நான்கு குழந்தைகள் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் 5 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய ராம்கிஷோரிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. அவர் தனது மனைவி குழந்தைகள் தீக்கிரையாகி கிடந்ததை பார்த்த அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். உடனே, அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போலீசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், இதுபற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating