லாகூர் சிறையை தகர்த்து கைதிகளை விடுவிக்கும் பாக். தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு!!
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள சிறையை தகர்த்து கைதிகளை விடுவிக்கும் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை உளவுத்துறையினர் முறியடித்துள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கோட் லக்பத் சிறையில் தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் தேசத்துரோக வழக்கில் கைதாகி மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக மரண தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெஷாவர் பள்ளி மீது சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தலிபான்களின் கொலைவெறி தாக்குதலையடுத்து, 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளை தூசி தட்டி, உயிர்ப்பித்த பாகிஸ்தான் அரசு, இந்த வாரத்தில் மட்டும் 6 தீவிரவாதிகளை தூக்கிலிட்டு கொன்றுள்ளது.
அடுத்தடுத்து, மேலும் பல தீவிரவாதிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறை மீது அதிரடி தாக்குதல் நடத்தி மரண தண்டனைக்காக காத்திருக்கும் தீவிரவாதிகளை விடுவிக்க சிலர் திட்டமிட்டு வருவதாக அரசின் உள்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அந்த சிறை வளாகத்தை ஒட்டியுள்ள பரிட் கோட் காலனியில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்ட போலீசார், சிறையை தகர்க்க சதி தீட்டம் தீட்டிய 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
அந்த வீட்டில் இருந்து ஒரு ராக்கெட் லாஞ்சர், அரசு பாதுகாப்பு படையினர் அணியும் சீருடைகள், காலணிகள், ஏராளமான துப்பாக்கிகள், வில்-அம்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய உமர் நதீம், அஷான் அஸிம், அமிர் யூசுப், ஆஸிப் இத்ரிஸ் மற்றும் கம்ரான் ஆகிய பயங்கர தீவிரவாதிகளை தூக்கிலிடுவதற்கு தடை விதித்திருந்த லாகூர் ஐகோர்ட் அந்த தடையை நேற்று விலக்கிக்கொண்டது.
இதனையடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற சூழல் நிலவி வரும் வேளையில், கோட் லக்பத் சிறையை தகர்த்து தீவிரவாதிகளை தப்புவிக்க இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating