திருப்புவனம் அருகே முள்படுக்கையில் படுத்து பெண் சாமியார் பக்தர்களுக்கு ஆசி!!
திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவனம் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே ஊரைச் சேர்ந்த நாகராணி என்பவர் உள்ளார். இந்த கோவிலில் மண்டல பூஜைகள் ஆண்டுதோறும் நடைபெறும். அப்போது, நாகராணி அம்மையார் 48 நாட்கள் விரதம் இருப்பார். இறுதிநாள் அன்று முள் மீது நின்று ஆடியும், படுத்தும் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குவார்.
இந்த ஆண்டு 35வது மண்டல பூஜையையொட்டி பூங்காவனம் முத்துமாரி அம்மனுக்கு 108 சங்காபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பு உள்ள வளாகத்தில் உடைமுள், இலந்தை முள், இலைக்கற்றாழை முள் உள்பட பலவகையான முள்களை கொண்டு சுமார் 6 அடி உயரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த முள்கள் மீது நாகராணி அம்மையார் ஏறி நின்றபடியும், ஆடி கொண்டும் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். பின்னர் அவர் இந்த முள்களின் மீது படுத்து கொண்டார். முன்னதாக அவர் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து மார்கழி 18–ந்தேதி வரை 48 நாட்கள் விரதம் இருந்தார். முள்படுக்கையின் மீது இருந்து இறங்கிய உடன் நாகராணி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Average Rating