தாஜ் மஹால் அருகே வரட்டி எரிக்க தடை: ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக்கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால், சுற்றுப்பகுதியில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் நச்சு மாசினால் மெல்ல, மெல்ல பழுப்பு நிறமாக மாறி வருகின்றது.
இந்த கறையினைப்போக்க அவ்வப்போது தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தபோதிலும், கறைகளில் இருந்து தாஜ் மஹாலை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில் ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தற்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதையடுத்து, ஆக்ரா முழுவதும் வரட்டி எரிப்பதை தடை செய்து இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தாஜ் மஹாலின் அருகாமையில் அமைந்துள்ள வளையல் தொழிற்சாலைகள், பால்கோவா தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவை கரி அடுப்புகளை பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளிலும் கரிக்கு மாற்று எரிப்பொருளாக சமையல் எரிவாயுவை பயன்படுத்தும்படி அறிவுறுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கியாஸ் அடுப்புகளை பயன்படுத்தும்படி பொதுமக்களை அறிவுறுத்தும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். இதன் மூலம் கரி அடுப்புகளில் இருந்து வெளியாகும் கருமைநிற கார்பன் படலம், தாஜ் மஹாலின் வெளிப்புற சுவரில் உள்ள சலவை கற்களின் மீது படிவதும், அவை பழுப்பு நிற கறையாக மாறுவதை தடுக்க முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதேபோல், ஆக்ரா நகருக்குள் ஓடும் சுமார் 4 ஆயிரம் டீசல் வாகனங்களை எரிவாயுவுக்கு மாற்றும்படி வலியுறுத்தப்படும். 15 ஆண்டுகளுக்கு மேலான பயன்பாட்டில் உள்ள வாகனங்களை இயக்குவதும் தடை செய்யப்படும் என கூறியுள்ள அதிகாரிகள், தற்போதைய உத்தரவை மீறி வரட்டி எரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
Average Rating