குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி வேலூரில் ரூ.4½ லட்சம் மோசடி!!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவருக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராமநாதன் தனது நண்பர்கள் பலராமன், மூர்த்தி ஆகியோரை கணேசனுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில் தங்கப்புதையல் இருப்பதாக கூறி அதனை குறைந்த விலைக்கு தருவதாக கணேசனை மூர்த்தி அணுகினார். தங்கப்புதையல் என்று கூறி கணேசனை வேலூர் பாலாற்றங்கரையோரம் கடந்த 31–ந் தேதி அழைத்துச்சென்றார். ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை ரூ.5 லட்சத்துக்கு தருவதாக கூறியுள்ளனர். அதனை உண்மையென நம்பிய கணேசனும், தனது ஊரில் உள்ள சுந்தரத்துக்கு தெரிவித்து பணத்தை வேலூருக்கு கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
உடனே சுந்தரம் ரூ.4 லட்சத்து 66 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வேலூருக்கு வந்தார். இங்கு அவரையும், கணேசனையும் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதிக்கு மூர்த்தி அழைத்துச்சென்றார். அங்குள்ள அறையில் தங்க வைத்துவிட்டு மூர்த்தி சென்றுவிட்டார். பின்னர் கடந்த 12–ந் தேதி இருவரையும் மூர்த்தி சந்தித்தார்.
தங்கம் தருவதாக அவர்கள் 2 பேரையும் வேலூர் ஒடுகத்தூர் ரோட்டுக்கு அழைத்துச்சென்றார். ஸ்ரீபுரம் அருகே ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச்சென்ற மூர்த்தி ரூ.4 லட்சத்து 66 ஆயிரத்தை பெற்று கொண்டார்.
பின்னர் தங்கத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு ஒரு காரில் சென்றார். வெகுநேரம் காத்திருந்தும் அவர் வரவில்லை. அதன்பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டது கணேசனுக்கும் சுந்தரத்துக்கும் தெரியவந்தது.
தங்களிடம் ரூ.4 லட்சத்து 66 ஆயிரத்தை மோசடி செய்து பறித்துச்சென்ற மூர்த்தி மீது அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மூர்த்தி மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் ராமநாதன் மற்றும் பலராமன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating