ஒருதலை காதல்: காதலை ஏற்க பெண் மறுத்ததால் ஊமத்தங்காயை தின்ற லோடு மேன்!!
கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் நேருநகரை சேர்ந்த சந்தானத்தின் மகன் விவேக்ராஜ் (வயது 22). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணும் விவேக்ராஜிடம் சகஜமாக பேசி வந்தார்.
ஆனால் விவேக்ராஜ் காதலை தனக்குள்ளே வைத்துக் கொண்டு நீண்ட நாட்களாக காலம் கடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் விவேக்ராஜ் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த அந்த பெண் விவேக்ராஜிடம், ‘நான் உங்களிடம் சாதாரணமாகத்தான் பேசினேன். நீங்கள் அதை தவறாக எடுத்து கொண்டீர்கள். நான் உங்களை காதலிக்கவில்லை’ என்று கூறி காதலை ஏற்க மறுத்தார்.
இதனால் விவேக்ராஜ் மனதுக்குள் கட்டிவைத்த காதல் கோட்டை தூள்தூளானது. மனம் உடைந்த விவேக்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஊமத்தங்காயை (விஷக்காய்) பறித்து தின்றார்.
சிறிது நேரத்தில் மயங்கிய விவேக்ராஜை அவரது உறவினர்கள் பார்த்தனர். அவர் ஊமத்தங்காயை தின்றிருப்பதை அறிந்த அவர்கள் உடனடியாக மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு விவேக்ராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating