கணவன் மீது மிளகாய் பொடி தூவி மனைவி கடத்தல்: 6 பேர் கைது!!
மதுரை கோச்சடையை சேர்ந்தவர் நாகராஜன் (வயது26). டிரைவராக உள்ளார். அவரது மனைவி முருகேஸ்வரி (வயது23). கோச்சடையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயது குழந்தை உள்ளது.
நேற்று மாலை முருகேஸ்வரி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் அருகே ஸ்ரீராமபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். பள்ளப்பட்டி பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக ஒரு ஆம்னி கார் வந்தது.
இந்த கார் மோட்டார் சைக்கிள் மீது உரசுவது போல் சென்றதால் நாகராஜன் சாலையோரம் வண்டியை நிறுத்தினார். காரில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல் கீழே இறங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் நாகராஜன் மீது அவர்கள் மிளகாய் பொடி தூவினர். பின்னர் மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துக்கொண்டு முருகேஸ்வரி மற்றும் அவரது குழந்தையை காரில் தூக்கி போட்டனர். பின்னர் அந்த கார் மின்னல் வேகத்தில் பறந்தது.
அதிர்ச்சி அடைந்த நாகராஜன் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இவர்கள் உதவியுடன் நாகராஜன் அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து அனைத்து சோதனை சாவடிகளுக்கும் போலீஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அய்யம்பாளையம் சோதனை சாவடியில் ஆம்னி கார் சென்றது. போலீசார் அந்த காரை சந்தேகத்தின்பேரில் மடக்கினர். அப்போது காரில் வந்தவர்கள் முருகேஸ்வரி மற்றும் குழந்தையுடன் இருப்பது தெரியவந்தது.
உடனே போலீசார் அந்த கும்பலை காருடன் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரை புதூர் பகுதியை சேர்ந்த ராஜ்கமல் என்பவருக்கும், நாகராஜன் மனைவி முருகேஸ்வரிக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.
முருகேஸ்வரி உறவினர் வீட்டிற்கு செல்வதை அறிந்த ராஜ்கமல் கம்பம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் அக்பர் அலி, ராஜாமுகமது, மன்சூர்அலிகான், ஆசிக் ராஜா, சவுக் சாதிக் ஆகியோர் உதவியுடன் முருகேஸ்வரியை கடத்த திட்டமிட்டுள்ளார். மேற்கண்டவை போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
காருடன் கைதான 6 பேரும் நிலக்கோட்டை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டனர். நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். கடத்தப்பட்ட முருகேஸ்வரி தனது குழந்தையுடன் கணவர் வசம் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating