காளஹஸ்தி அருகே எருது விடும் போட்டியில் மாடுகள் மிதித்து விவசாயி சாவு!!
பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே உள்ள புலிச்சேர்லா மண்டலம் எல்லம்கிவாரிபள்ளி கிராமத்தில் கடந்த 16–ந் தேதி எருது விடும் போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்கும் எருதுகள் ஓடுவதை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் வழிநெடுக குவிந்திருந்தனர்.
அதில், நன்னூரிவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயியான குருசாமி (வயது 55) என்பவரும் பார்வையாளராக மக்களோடு மக்களாக நின்றிருந்தார். அப்போது போட்டியில் ஓட விடுவதற்காக 5 எருதுகளை விழா குழுவினர் ஓட்டி சென்றனர். அந்த நேரத்தில் வழியில் கூட்டமாக நின்றிருந்த நாய்கள், எருதுகளை பார்த்து குரைத்தபடி ஓடின. இதனால் பிடியில் இருந்து விடுபட்ட 2 எருதுகள் மிரண்டு துள்ளி குதித்து பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தது.
அதில், மக்கள் கூட்டத்தில் நின்றிருந்த குருசாமியின் மீது எருதுகள் விழுந்து மிதித்தது. எருதுகள் மிதித்ததில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எல்லம்கிவாரிபள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பாரெட்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating