சூனியக்காரர்கள் என்று கூறி 8 பேரின் பல்லை பிடுங்கி, மொட்டை அடித்து, மலம் தின்ன வைத்து கொடுமைப்படுத்திய கும்பல்!!
ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் சூனியக்காரக் குடும்பம் என்ற சந்தேகத்தில் அந்த குடும்பத்தினர் 8 பேரின் பற்களை பிடுங்கி, மொட்டை அடித்து, அவர்களை வற்புறுத்தி மலம் தின்ன வைத்த கிராம மக்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள ஒலாப்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம் பில்லி, சூனியம் போன்ற மாந்தரீக வேலைகளை செய்து வருவதாக கிராம பஞ்சாயத்தில் முறையிடப்பட்டது. அவர்களை அழைத்து விசாரித்தபோது தாங்கள் அப்படி எல்லாம் செய்ததே இல்லை என்று வாக்குமூலம் அளித்தனர்.
இதனை நம்பாத கிராம மக்கள் கடந்த 18-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட அந்த குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 8 பேரை பிடித்து, அவர்களின் பற்களை பிடுங்கி, மொட்டை அடித்து, வற்புறுத்தி மலம் தின்னவும் வைத்துள்ளனர். இதனால், பயந்து நடுங்கிய அந்த குடும்பத்தினர் உயிர் தப்பினால் போதும் என அந்த கிராமத்தை விட்டே தப்பியோடி விட்டனர்.
அவர்களில் ஒருவர் நேற்று போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating