தஞ்சையில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்?: உருக்கமான தகவல்!!
தஞ்சை கோரிகுளம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தஞ்சையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி அனுராதா (வயது 30). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. காயத்ரி (9), கவுதம் (3) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். காயத்ரி 4–ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் கவுதமுக்கு போலியோ தாக்கி கால்கள் செயலிழந்து இருந்தது. இதனால் அனுராதா மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் ரமேஷ் டிராவல்சுக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அனுராதாவும், குழந்தைகளும் இருந்தனர். இவரது வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் ரமேசுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், டவுன் டி.எஸ்.பி. தமிழ்ச்செல்வன், இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ், சப்–இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனுராதா மின் விசிறி கொக்கியில் தூக்கில் தொங்கினார்.
அருகில் சிறுமி காயத்ரி தலையில் பலத்த காயத்துடனும், சிறுவன் கவுதம் கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கியும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். 2 குழந்தைகளை அனுராதா கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அறையில் அனுராதா எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில் மகன் மாற்றுத்திறனாளியாக இருப்பது மிகவும் வேதனையாக இருப்பதாகவும், அதனால் விரக்தியடைந்து குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. மேலும் தனது உடலை தானமாக வழங்கவேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. 3 பேர் உடல்களை மீட்ட போலீசார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தஞ்சை தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுராதா கணவர் ரமேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முழுவதும் முடிந்த பிறகே சரியான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating