சிங்கம்புணரி அருகே காதல் ஜோடி தற்கொலை: காதலன் பலி!!
சிங்கம்புணரியை அடுத்த எட்டிமங்கலம் அருகே உள்ள கிழக்குபட்டியை சேர்ந்த ஜோதி மகன் வெங்கடேஷ் (வயது 25) பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்துள்ளார்.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கலா (20) என்ற பெண்ணுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2 வருடங்களாக காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் கலாவுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தனர். பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க இருந்தது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று மதியம் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள கண்மாய் பகுதிக்கு வந்தனர். அரளி விதையை அரைத்து இருவரும் சாப்பிட்டனர்.
விஷம் சாப்பிட்டதை மறைத்து கலா வீட்டுக்கு சென்று விட்டார். வெங்கடேஷ் ரெட்டையன் பொட்டல் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற ஆடு மேய்ப்பவர்கள் இதை பார்த்து கிராமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக வெங்கடேசை சிங்கம்புணரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
வீட்டில் மயங்கி கிடந்த கலாவை, அவரது பெற்றோர் சிங்கம்புணரியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் கலாவை, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எட்டிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating