சேலத்தில் திருமணத்திற்கு தாய் வற்புறுத்தியதால் லாரி டிரைவர் தீக்குளிப்பு!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ளது மாம்மாந்திரோடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 21), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை.
நேற்று இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள லாரி பட்டறை ஒன்றுக்கு வந்தார். தனது முதலாளியின் லாரி பழுது பார்க்கப்பட்டு விட்டதா? என கேட்க வந்து இருந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பட்டறையில் யாரும் இல்லை. அப்போது சசிக்குமார் பட்டறையில் வைத்து இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இந்த தீ அவர் உடல் முழுவதும் பிடித்து எரிந்தது. இதனால் அவர் அலறித்துடித்தார்.
இவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து உடல் கருகி கிடந்த சசிக்குமாரை தூக்கி சென்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த சேலம் கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்–இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த விசாரணையில் வாலிபர் சசிக்குமாரின் அண்ணனுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் குடும்பத்துடன் நன்றாக இருந்து வருகிறார். இவரைப்போல் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ சசிக்குமாரின் தாயார் அவரை தினமும் வற்புறுத்தி வந்தார். ஆனால் சசிக்குமார் திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார். இருப்பினும் அவரது தாயார் நேற்று சசிக்குமாரை அழைத்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சசிக்குமார் கொண்டலாம்பட்டிக்கு வந்து மதுகுடித்துள்ளார். பின்னர் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட வேறு காரணம் ஏதும் உண்டா? என்றும் விசாரணை நடக்கிறது.
Average Rating