சேடப்பட்டி அருகே தாயை அடித்துக்கொன்ற மகன் கைது!
மதுரை சேடப்பட்டி அருகே உள்ள ஆவல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி (வயது 67). இவரது கணவர் வீரபத்திரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இவரது 2–வது மகன் முருகேசன் (45). விவசாயி. இவர் பூர்வீக சொத்தை தனக்கு பிரித்து தருமாறு, தாயாரிடம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
ஆனால் பசுபதியோ, தன்னுடைய மற்ற பிள்ளைகள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். எனவே அவர்கள் அனைவரையும் வரவழைத்து பேசிய பின்னர் தான் சொத்தை பிரிக்க முடியும் என கூறிவந்தார். ஆனாலும் சொத்தை தனக்கு எழுதி தரும்படி முருகேசன் தொடர்ந்து தகராறு செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல அவர் தனது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முருகேசன், அடுப்பு ஊதும் ஊதுகுழலை எடுத்து தனது தாயாரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த பசுபதி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் முருகேசன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேடபட்டி போலீசார் முருகேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating