வேடசந்தூர் அருகே வினோதம்: சிறுமியை நிலா பெண்ணாக்கி கிராம மக்கள் வழிபாடு!!
வேடசந்தூர் அருகில் உள்ள தேவிநாயக்கன் பட்டியில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் பவுர்ணமி தினத்தன்று நிலா பெண் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த வயதுக்கு வராத சிறுமிகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட சிறுமியே 3 வருடங்களுக்கு நிலா பெண்ணாக்கி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இரவு தேவிநாயக்கன்பட்டியில் நிலா பெண் ஊர்வலம் மற்றும் வழிபாடு நடந்தது.
அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்–சுதா ஆகியோரின் மகளான உமாமகேஸ்வரி (வயது12) என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார்.
பவுர்ணமி தோன்றியவுடன் நிலா பெண்ணை அவரது வீட்டில் இருந்து அழைத்து வந்து சரளைமேடு என்ற பகுதியில் நிலா வெளிச்சத்தில் அமர வைத்து ஆவாரம் பூவால் அலங்கரித்தனர்.
அதன் பிறகு ஒரு பூக்கூடையில் ஆவாரம் பூக்களை நிரப்பி மாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் அழைத்து வந்தனர். கோவில் முன்பு நிலா பெண்ணை அமர வைத்து பெண்கள் கும்மி அடித்தனர்.
அதன் பிறகு அங்கு பொங்கல் வைத்து நிலா பெண்ணுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் மாதடச்சியம்மன் கோவிலுக்கு நிலா பெண்ணை மேளதாளம் முழங்க அழைத்து வந்து மாமன் முறையில் உள்ள ஆண்கள் குடிசை கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூப்பெய்த பெண்களுக்கு செய்யப்படும் சடங்கைபோல் பச்சை தென்னை மட்டையால் குடிசை கட்டி அதில் சிறுமியை அமர வைத்தனர்.
பின்னர் ஊரில் உள்ள பெண்கள் மா விளக்கு எடுத்து வந்து அங்கு வழிபாடு நடத்தினர். இரவு முழுவதும் விடிய விடிய நிலா பெண் வழிபாடு நடந்தது. அதிகாலை 4 மணிக்கு நிலா பெண்ணை பூக்கூடையுடன் அழைத்து வந்து ஊர் பொதுக்கிணற்றில் பூக்களை கொட்டினர். பின்னர் அந்த பூக்களின் மீது அகல் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு நிலா பெண் வீட்டிற்கு திரும்பினார்.
இது குறித்து அந்த கிராம மக்கள் கூறும்போது, கடந்த பல வருடங்களாக தை மாதம் பவுர்ணமி தினத்தன்று நிலா பெண் வழிபாடு நடத்தி வருகிறோம். இதனால் ஊரில் மழை செழித்து விவசாயம் வளர்ச்சி அடையும்.
ஊருக்குள் ஒற்றுமை வளரும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து இதனை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
Average Rating