ஐதராபாத்தில் கற்பழிப்பு கும்பலை அம்பலப்படுத்திய சமூக சேவகியின் கார் மீது தாக்குதல்!!
ஐதராபாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன். இப்பெண்மணி, தனது இளம் வயதில் கற்பழிக்கப்பட்டவர் ஆவார். தற்போது, ‘பிரஜ்வாலா‘ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெண்கள், குழந்தைகள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுவதற்கு எதிராக இவர் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இரண்டு வீடியோ காட்சிகள், இவருக்கு ‘வாட்ஸ்அப்‘பில் வந்தன. அவற்றை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவற்றில், 5 பேர் கொண்ட கும்பல், ஒரு இளம்பெண்ணை கற்பழிக்க முயலும் காட்சி படம் பிடிக்கப்பட்டு இருந்தது. இளம்பெண்ணை மிரட்டுவதற்காக, அந்த கும்பலே அதை படம் பிடித்து இருப்பதாக கருதப்படுகிறது. ஒரு படம், 8 நிமிடங்களும், மற்றொரு படம் 4 நிமிடங்களும் ஓடுகிறது.
அந்த கும்பல் கைது செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய சுனிதா கிருஷ்ணன், நேற்றுமுன்தினம் அந்த இரண்டு வீடியோ படங்களையும் ‘யு டியூபில்‘ வெளியிட்டார்.
மேலும், நேற்று அதிகாலையில், ஒரு தனியார் டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கற்பழிப்பு கும்பலை பிடிக்க உதவுமாறு டெலிவிஷன் சேனல் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, அதிகாலையில் சுனிதா கிருஷ்ணன், காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் மீது சில மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அவரது கார் சேதம் அடைந்தது.
இதுதொடர்பாக சுனிதா கிருஷ்ணன், போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீடியோ படத்தில் இடம்பெற்றுள்ள கற்பழிப்பு கும்பல்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கார் தாக்கப்பட்ட சம்பவத்தை ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் மகேந்திர ரெட்டி உறுதிப்படுத்தினார். குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
Average Rating