காதலனை கரம் பிடிக்க பெற்றோரை உதறிய பெண்: போலீஸ் நிலையத்தில் 1 மணி நேர பாச போராட்டம்!!
நாகர்கோவில் பால் பண்ணை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23), என்ஜினீயர்.
சென்னை ஏழுகிணறு வரதப்பர் தெருவை சேர்ந்தவர் பிந்து ஷாலினி (24), எம்.பி.ஏ. படித்துள்ளார். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. காதல் விவகாரம் பிந்து ஷாலினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில் பிந்து ஷாலினிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகள் செய்தனர். இந்த விவரத்தை பிந்து ஷாலினி, தனது காதலன் விஷ்ணுவிடம் தெரிவித்தார்.
இதையடுத்து பிந்து ஷாலினி வீட்டை விட்டு வெளியேறி காதலன் விஷ்ணுவுடன் குமரி மாவட்டம் வந்தார். பின்னர் தக்கலையில் உள்ள ஒரு கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவரும் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிந்து ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது தனது மகளை தன்னுடன் வருமாறு பிந்து ஷாலினியின் தந்தை அழைத்தார்.
ஆனால் அவர், தனது காதலன் விஷ்ணுவுடன் தான் வாழ்வேன் என்று உறுதியாக இருந்தார். மகள் தன்னுடன் வராததால் பிந்து ஷாலினியின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சுமார் 1 மணி நேரம் நடந்த பாசப்போராட்டத்தில் பெற்றோரை உதறி பிந்து ஷாலினி காதலனை கரம் பிடித்தார்.
போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பினர்.
Average Rating