வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தரவேண்டும்: கலெக்டரிடம் இளம்பெண் மனு!!
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேட்ட நல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மாரிமுத்து (வயது29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான மணிகண்டன் மதுரையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார்.
இந்த நிலையில் மணிகண்டனின் மனைவி மாரிமுத்து இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கலெக்டரிடம் கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
வெளிநாடு சென்ற எனது கணவரை கொத்தடிமையாக வைத்துள்ளனர். அவரை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர். எனது கணவரை வெளிநாடு அனுப்பி வைத்த தனியார் டிராவல்ஸ் நிர்வாகத்திடம் சென்று மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினேன்.
ஆனால் அவர்கள் ரூ.1½ லட்சம் தந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என கூறுகின்றனர். எனவே, வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் எனது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Average Rating