சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட சிறுமிக்கு பளார் அறை: ஆசிரியை மீது போலீசில் புகார்!!
பல்லடம் அருகே மாணிக்காபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் அதே ஊரை சேர்ந்த முத்துசாமி–லீலாவதி தம்பதியின் மகள் கண்மணி 1–ம் வகுப்பில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை 10 மணிக்கு வகுப்பில் பாடவேலையின்போது சிறுநீர் கழிக்க செல்ல வேண்டும் என்று வகுப்பு பாட ஆசிரியராக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை திலகவதியிடம் கேட்டார்.
அப்போது, ‘‘உனக்கு இதே வேலையாக போய் விட்டது’’ என்று கூறி கண்மணியின் கன்னத்தில் பளார் என்று திலகவதி அறைந்தார். இதில் கண்மணியின் காதில் இருந்து ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கண்மணி சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து கண்மணியின் பெற்றோர் பல்லடம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணிக்காபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். சிறுமி கண்மணியை தாக்கிய ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதனிடம் வலியுறுத்தினர்.
அரசுத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன் என்று ஊராட்சி தலைவர் சாமிநாதன் கூறியதை தொடர்ந்து முற்றுகையை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.
Average Rating