குஜராத்தில் 15–ந்தேதி திறப்புவிழா: எனக்கு கோவிலா?- மோடி எதிர்ப்பு!!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் கோதாரியா கிராமம் உள்ளது. இங்கு பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து மோடிக்கு கோவில் கட்டியுள்ளனர். கோவிலின் உள்ளே 4 அடி உயர பீடத்தில் மோடியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டு காவி துண்டு போர்த்தப்பட்டுள்ளது. அந்த துண்டில் தாமரை சின்னம் இடம் பெற்றுள்ளது. சிலை மீது பித்தளையால் ஆன சிறிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே பாரத மாதாசிலை மோடி உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வருடங்களாக இந்த கோவில் கட்டப்பட்டு வந்தது. வருகிற 15–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சாதாரணமாக சிறிய அளவில் கோவில் கட்டி வந்தனர். அவர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனதால் கோவிலை பிரமாண்டமாக கட்டினர்.
இதற்கிடையே தனக்கு கோவில் கட்டப்பட்டு இருப்பதை அறிந்த பிரதமர் மோடி அதிர்ச்சியும், கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–
எனக்கு கோவில் கட்டப்படுவதாக வந்த செய்தியை பார்த்தேன். இது நமது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது. இத்தகைய கோவில் கட்டுவது நமது கலாசாரத்தில் இல்லை. தனிப்பட்ட முறையில் இது எனக்கு கவலை அளிக்க கூடியதாக உள்ளது. அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக செலவிடும் நேரத்தை நமது கனவான சுத்தமான இந்தியாவை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி எதிர்ப்பைத் தொடர்ந்து வருகிற 15–ந் தேதி நடைபெறுவதாக இருந்த கோவில் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
Average Rating