காதல் மனைவியின் உயிரை காப்பாற்ற சிறுநீரகத்தை தானம் செய்த கணவன்!!
சிறுநீரகம் செயலிழந்த மனைவிக்கு ஒரு கணவன் கொடுக்கக்கூடிய சிறந்த காதல் பரிசு சிறுநீரகமாகத்தான் இருக்க முடியும் ஆனால், தன்னுடைய சிறுநீரகம் மனைவிக்கு பொருந்தாது என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தன் சிறுநீரகத்தை இழந்து தன் மனைவிக்கு சிறுநீரகத்தை பெற்றுத்தந்திருக்கிறார்.
டெல்லியின் காசியாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் தல்வார். இவரது மனைவி பூஜா. கடந்த வருடம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்ததாக தெரிவித்தனர்.
உடனடியாக தன் சிறுநீரகத்தை மனைவிக்கு பொருத்திவிடுங்கள் என்று அருண் கூறினார். ஆனால் அவரது ரத்தம் ‘பி பாசிடிவ்’ வகையை சேர்ந்தது என்பதால் வேறு ஒருவரின் சிறுநீரகத்தையே பூஜாவுக்கு பொருத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் கடந்த ஒரு வருடமாக அவரது சிந்தனை, கனவு, லட்சியம் எல்லாம் எப்படி மனைவிக்கு சிறுநீரகத்தை பெற்றுத்தருவது? என்பதுதான்.
இதற்காக அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று தன்னார்வலர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் என்று பல தரப்பட்டவர்களை சந்தித்து தனது நிலையை எடுத்துக்கூறி தன் மனைவிக்கு சிறுநீரகம் கொடுப்பவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருப்பதாக கூறினார்.
அப்போதுதான் 22 வயது நோயாளி ஒருவருக்கு ‘பி பாசிட்டிவ்’ ரத்தம் கொண்டவரின் சிறுநீரகம் தேவைப்படுவது தெரிய வந்தது. உடனே, தன் மனைவியின் மேல் கொண்ட காதலால் அருண் அந்த நோயாளிக்கு தனது சிறுநீரகத்தை கொடுத்தார். அதேசமயம் தன் மகன் மீது கொண்ட பாசத்தால் அந்த நோயாளியின் அம்மா தனது சிறுநீரகத்தை அருணின் மனைவிக்குக்கொடுத்தார்.
தற்போது இருவரும் சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அம்மா, மனைவி என்று பெண்களே அதிகம் உடலுறப்பு தானம் செய்து வரும் நிலையில், தன் மனைவிக்காக சிறுநீரகத்தை தானம் செய்த அருணை மருத்துவர்கள் கட்டிப்பிடித்து வாழ்த்தினர்.
Average Rating