திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு!!
திருவண்ணாமலை– மணலூர்பேட்டை சாலையில் கீழ் அணைக்கரை கிராமத்தின் புறவழி சாலையில் அரசு மதுபான கடை (டாஸ்மாக்) உள்ளது. இதன் மேற்பார்வையாளராக திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்த தண்டபாணி (வயது 43) பணிபுரிந்து வருகிறார்.
வைப்பூரை சேர்ந்த அருணாசலம், கண்ணகுறுக்கையை சேர்ந்த அண்ணாமலை ஆகிய 2 பேரும் விற்பனையாளர்களாக வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தண்டபாணி கடையை பூட்டிவிட்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் அண்ணாமலை டாஸ்மாக் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர். அதன் பின்னர் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் துறை அதிகாரிகள் கீழ் அணைக்கரை கிராமத்திற்கு சென்று திருட்டு போன மதுப்பாட்டில்களை கணக்கெடுத்தனர். அப்போது சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மதுப்பாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடிய மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு மதுவிற்ற பணம் ரூ.1 லட்சத்தை மேற்பார்வையாளர் தண்டபாணி வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டார். இதனால் ரூ.1 லட்சம் பணம் தப்பியது.
Average Rating