விழுப்புரத்தில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை–பணம் கொள்ளை!!
விழுப்புரம் ஆசிரியர் நகர் குபேர சிட்டி தெருவை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 49). இவர் கள்ளக்குறிச்சியில் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (43). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயசூரியன் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
இதனை மர்ம மனிதர்கள் நோட்டமிட்டனர். நள்ளிரவில் அங்கு வந்தனர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டு பீரோவில் இருந்த 20 கம்மல், ஒரு நெக்லஸ், 2 தங்க சங்கிலி ஆகியவைகளையும், வெள்ளியிலான காமாட்சி அம்மன் விளக்கு, பூஜை பாத்திரங்கள் மற்றும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு லேப்–டாப் ஆகியவைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும்.
நேற்று உதயசூரியன் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி, சப்–இன்ஸ்பெக்டர் மதிமாறன் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள், சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளை நடந்த இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடியது. இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating