இந்தியாவில் தடைகளை தாண்டி முதல் முறையாக ஹோலி கொண்டாடிய விதவை பெண்கள்!!
பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த தடைகளை உடைத்து முதல் முறையாக வாரணாசி மற்றும் விருந்தாவனில் உள்ள விதவைப் பெண்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட விதவைப் பெண்களில் ஏராளமானோர் உத்தரபிரதேசத்தில் உள்ள இந்துகளின் புனித நகரங்களான வரணாசி மற்றும் விருந்தாவனில் விடப்படுகின்றனர். இவர்களில் பலர் விதவைகளுக்கான ஆசிரமங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்தப் பெண்கள் வெள்ளை உடை அணிந்துகொண்டு, அனைத்து விதமான பண்டிகைகள், கொண்டாட்டங்களிலும் இருந்தும் விலக்கி தனிமையில் வசிக்க வைக்கப்படுகிறார்கள்.
போதிய சாப்பாடு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் கூட சரிவர கிடைக்காமல் உள்ள அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.
சராசரி பெண்களைப் போன்று எந்த கொண்டாட்டங்களிலும் பங்கெடுக்க முடியாமல் நடைபிணமாக வாழும் அவர்களின் வாழ்க்கையில், ஒரு சிறிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அவர்களுக்கான 3 நாள் ஹோலி பண்டிகையை சர்வதேச தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அடிப்படைவாதிகளின் எதிர்பையும் மீறி விருந்தாவனில் நடந்த இந்த பண்டிகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் பங்கேற்றனர். வண்ணச் சாயங்களை ஒருவருக்கொருவர் பூசியும், பூக்களை வாரி இறைத்தும் அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
விதவைகளின் தற்போதைய நிலைமையை மேம்படுத்துவதற்காகவே இதுபோன்ற கொண்டாட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொண்டு நிறுவனம் கூறுகிறது.
Average Rating