ஸ்ரீரங்கம்: புற்றுநோய் பாதித்த மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட கணவர்!!
ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த 8–ந்தேதி கணவன், மனைவி என்று கூறி அறை எடுத்து தம்பதியினர் தங்கினர்.
கோவிலுக்கு சாமி கும்பிட வந்ததாக அவர்கள் தெரிவித்த அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா, நெல்லிக்குப்பம், பெரியார் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 58), மனைவி உமையாள் (55) என்று பெயர் பதிவு செய்திருந்தனர்.
அவ்வப்போது அறையில் இருந்து வெளியிலும் சென்று வந்தனர். இந்த நிலையில் இன்று வெகுநேரமாகியும் அவர்களது அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம், சப்–இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அறையின் மின்விசிறியில் ஒரே சேலையில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.
தற்கொலை செய்து கொண்டவர்கள் லாட்ஜில் கொடுத்த பெயர் உண்மையானது என்றும், அவர்கள் கொடுத்த விலாசத்தில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. ரவிச்சந்திரன் நெல்லிக்குப்பம் பகுதியில் வட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இவரது மனைவி உமையாளுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ரமா, தேவி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் ரமாவிற்கு திருமணமாகி அவரது கணவர் செந்தில் குறிஞ்சிபாடி என்ற பகுதியில் வட்டி கடை நடத்தி வந்துள்ளார்.
புற்றுநோயால் பாதித்த உமையாளுக்காக வேண்டுதல் நிறைவேற்ற அவரை அழைத்துக் கொண்டு ரவிச்சந்திரன் கடந்த 8–ந்தேதி ஸ்ரீரங்கம் வந்துள்ளார். அறை எடுப்பதற்கு முன்னதாக அங்கு பெயர் பதிவு செய்தவரிடம் தனது மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்றும் இது எங்களது கடைசி பயணமாக இருக்கும் என்பதாக தெரிவித்தது தெரிய வந்தது.
மனைவி புற்று நோயால் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் மனமுடைந்து அவருடன் ரவிச்சந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ரவிச்சந்திரனுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Average Rating