காசிமேட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து சாவு!!
காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் அஜீத் (21). மீனவர். அஜீத் அதே பகுதியை சேர்ந்த மலர்க்கொடி (18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வாரம் இவர்களுடைய திருமணம் நடந்தது.
இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற அஜீத் நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மலர்க்கொடி நேற்று மாலை தனது கணவர் அஜீத்தை தேடி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்றார். அங்கும் அவரை காணவில்லை.
இதனால் மனம் உடைந்த மலர்க்கொடி மீன்பிடிதுறைமுக பாலம் அருகே, நடு ரோட்டில் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அனைத்தனர்.
படுகாயம் அடைந்த மலர்க்கொடி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் நடந்த ஒரே வாரத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
Average Rating