பண்ருட்டி அருகே கர்ப்பிணி பெண் கழுத்தை அறுத்து படுகொலை: கணவன் வெறிச்செயல்!!
பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 29), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி உமா (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது உமா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். வீரமணி வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்தார். நேற்று மாலை அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
இரவு கணவன்–மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இன்று காலையிலும் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காலை 11 மணியளவில் தகராறு முற்றியது. அப்போது வீரமணி ஆத்திரமடைந்தார். உமாவின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் கத்தியால் அறுத்தார். இதில் உமா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். அந்த இடம் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது. உடனே வீரமணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சந்திரபாபு, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொலை செய்யப்பட்ட உமாவின் பிணத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீரமணியை போலீசார் வலைவீசி தேடினார்கள். அந்த பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். கொலை தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating