விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு தாய்–மகள் கடத்தல்: 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உடையந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 34) தொழிலாளி. இவர் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மல்லிகா (25) என்ற மனைவியும், திவ்யா (2) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 1 மாதத்துக்கு முன்பு விடுமுறையில் உடையந்தல் கிராமத்துக்கு செந்தில் வந்தார். பின்னர் அவர் வேலைக்கு செல்லவில்லை.
இதையடுத்து செங்கல் சூளையில் இருந்து அவரை வேலைக்கு வரும்படி செல்போனில் பேசினார்கள். ஆனால் அவர் செல்லவில்லை.
இந்த நிலையில் செந்திலின் மனைவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையொட்டி அவர், மனைவி மல்லிகா, மகள் திவ்யா ஆகியோருடன் நேற்று மாலை விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆஸ்பத்திரியில் மல்லிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் செந்தில் தனது மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்வதற்காக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே வந்தார்.
பின்னர் அவர்களை அங்கேயே நிற்குமாறு கூறிவிட்டு திவ்யாவுக்கு பால் வாங்கி வருவதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். பால் வாங்கி கொண்டு வந்து பார்த்த போது மல்லிகாவையும், திவ்யாவையும் காணவில்லை. அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தார் கிடைக்கவில்லை.
இரவு 9 மணிக்கு செங்கல் சூளையில் இருந்து செந்திலுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், ‘‘உன் மனைவி, மகளை காரில் கடத்தி வந்து செங்கல் சூளையில் வைத்திருக்கிறோம். நீ வேலைக்கு வராவிட்டால் அவர்களை கொன்று விடுவோம்’’ என்று மிரட்டினர்.
இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் செந்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் செங்கல்பட்டு அருகே உள்ள அந்த செங்கல் சூளைக்கு விரைந்து சென்றனர். அங்கு கடத்தி வைக்கப்பட்டிருந்த மல்லிகா, திவ்யா ஆகியோரை மீட்டு விழுப்புரத்துக்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக செங்கல் சூளை மேலாளர் ஏழுமலை, ஊழியர் வேலு மற்றும் செங்கல் சூளை அதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating