பெங்களூர் கல்லூரி விடுதியில் 18 வயது மாணவி சுட்டுக் கொலை: குண்டு காயத்துடன் மற்றொரு மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி!!
பெங்களூர் புறநகர் பகுதியான கடுகோடியில் உள்ள பிரகதி கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்துவரும் மாணவியான கவுதமி(18) என்ற பெண் அதே கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்டலில் தங்கியுள்ளார்.
நேற்றிரவு ஆஸ்டல் அறையில் தனது தோழிகளுடன் அவர் இருந்தபோது அதே கல்லூரியில் குமாஸ்தாவாக பணியாற்றிவரும் மகேஷ் என்பவர் உள்ளே நுழைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் இருந்த துப்பாக்கியால் கவுதமியை நோக்கி சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த கவுதமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முகத்தில் குண்டடிபட்ட அவரது தோழி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முகத்தில் இருந்த குண்டு ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டதாகவும், தற்போது அந்தப் பெண் அபாயகட்டத்தை தாண்டி விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இந்த கொலை தொடர்பான தகவல் கிடைத்ததும் கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜார்ஜ் அந்த கல்லூரிக்கு சென்று பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார்.
இந்த துணிகர கொலையை செய்துவிட்டு சம்பவ இடத்தை விட்டு ஓடிப்போய் தனது சகோதரியின் வீட்டில் பதுங்கியிருந்த மகேஷை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளி மகேஷ் அந்த கல்லூரியில் சுமார் இரண்டாண்டுகளாக வேலை செய்து வருவதாகவும், இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது புரியாத புதிராக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Average Rating